Sunday, February 12, 2012


எப்படி சொல்வேன் உன்னை
நான் எங்ஙனம் சொல்வேன் பெண்ணே
இப்படியோர் புது வாழ்வு
நான் அடைந்திட்டதே பெரும் பேறு
செப்படி வித்தைகள் இல்லை - அன்பின்
செழுமைக்கு நீயே எல்லை
தப்படி உனை குறை சொல்தல் - என்
தாரமே நிறைமகள் நீயே..!

இப்புவி இருந்திடும் மட்டும்
என் இருதயத் துடிப்பினில் நித்தம்
ஒப்பிலா உன்பெயர் இசைக்கும் - அன்பை
ஓதிடும் வேதமாய் ஒலிக்கும்
அப்படியோர் மறை படைத்து -என்
ஆலயமாய் உனை நினைத்து
செப்பிடும் படி செய்திடுவேன்
உன் சேயன நான் உருகிடுவேன்..!

யாரடி என் மணவாட்டி
என ஏங்கிய நாட்களும் உண்டு
தேரடி ஊரடி என்று நான்
தேடியேத் தீர்த்ததும் உண்டு
வேரடி நீர்தொடும் விழுதாய் என்
வேனிற்காலப் பொழுதில்
ஓரடி எடுத்திடத் துணிந்தாய் என்
ஒருவனுக்காவேப் படர்ந்தாய்..!

தாயை நான் இழந்து
தடுமாறிய பொழுதுகளில்
தீயை நான் விழுங்கி
திசை மாறிய தருணங்களில்
தாயாய் எனைத் தழுவி உன்
தரமிகு மடி ஈந்து
சேயாய் எனை சேர்த்தாய் - உன்
சேலையிலே எனை சாய்த்தாய்..!

என்ன செய்திடுவேன் நான்
என்று இருக்கையிலே
எண்ணத் தீ மூட்டி நான்
எரிய நினைக்கயிலே
முன்னம் செய்வினையோ என்
முழுமுதற் தவப் பயனோ
உன்னை உளமெடுத்தேன் என்
உயிரின்  நீட்சி கண்டேன்..!

இருளும் கூடத்தில் நான்
இயக்கம் அற்றுவிழ
உருளும் காலத்தை என்
உலகம் கொன்று விட
மிரளும் அச்சத்தில் என்
மீசை பலனிலக்க
உன் அருளால் ஒளியுணர்ந்தேன் என்
அகிலம் விரியக் கண்டேன்..!

உள்ளம் புரிந்தால்
உலகம் துளிர்க்கும்
கள்ளம் புகுந்தால்
கனியும் கசக்கும்
தெள்ளத் தெளிவாய்
எனைத் தெரிந்தாயே
வெள்ளம் மீட்டு எனை எடுத்தாயே
அள்ளிக்கொடுத்த அமுத சுரபியே
பள்ளிகொள்கிறேன் உன்
பார்வையின் மடியில்..!

மாயை சார்ந்த முகத்தை நான்
மனிதர் என்றே கண்டேன்
சாயம் போன மனதை நான்
சரித்திரக் குறிப்பென்றுரைத்தேன்
காயம் பட்ட பின்னர் என்
குட்டை கலங்கிடக் கண்டேன்
தூயவள் உன் துளி ஒன்றில்
'அ'சுத்தம் துலங்கிடப் பெற்றேன்..!

உன்னைப் பார்த்த பின்தான்
என்னைப் பார்த்து கொண்டேன்
என்னைப் பார்த்த பின்தான்
என்னில் ஏற்றம் கண்டேன்
கண்ணை தானம் செய்யும்
கனிவுள நெஞ்சம் போல
உன்னை தானம் செய்தாய்  என்
உயிரே நீயும் வாழ்க..!




Saturday, November 27, 2010




டிசம்பர் 1


என் வாழ்வின்
உயர்வான பரிசு
உருவான தின
வாழ்த்துக்கள்....!

பிரியா
சிவன்

Saturday, October 2, 2010

மா..!

கள்ளமில்லா சிறு மழலை
முகம் பூக்கும்
புன்னகை போல்
உள்ளமெல்லாம்
எனைத்தேக்கி உயிர்குவிக்கும்
சிறு நகையில்
கள்ளிருக்கும் உதடுகளால்
கனி ஒழுகும் சொல்லெடுத்து
மந்திரமாய் என்னுள்ளே
மா என்றே ஒலிக்கவைத்தாய்..

மா!
என் மீதான
உன் உணர்வின்
ஒட்டுமொத்த அளவீடு..

மா..!
அதிகபட்ச அன்பின்
சர்வதேசக் குறியீடு

மா..!
உலக அழகியலின்
ஒருமித்த ஒலிவடிவம்

மா..!
என் அகம் புறம்
இரண்டையும் காட்டும்
அதிசயக் கண்ணாடி

ஒரு நொடிக்குள்
சுவர்க்கத்தைக்
கட்டி எழுப்ப இயலுமா?
முடியும் என்கிறது மா!

மனதை
உணர முடியும்
கேட்க முடியுமா?
முடியும் என்கிறது மா..!

மா..!
உன்
மனதின் வடிவம்..

நீ
மா சொல்லும் பொழுதுகளில்
நட்டு வைத்துப் போகிறாய்
சிறு சிறு பூங்காக்களை

நீ
மா உதிர்க்கும் தருணத்தைக்
காற்றின் அதிர்வுகளும்
கவனிக்கத் தவறுவதில்லை
அதனால்தான்
தென்றலாய் என்னுள்
பண்ணிசைத்துக் கொடுக்கிறது

உன்
மா! வில் புலர்கிறது
எனக்கான விடியல்

எங்கே!
மா சொல்லு
என் அணுக்கள் முழுக்க
வாசம் சுரக்கும்

மா..! சொல்லு
இதயம் இன்னும்
இளமையாகும்

மா..! சொல்லு
உயிரின் நீளம்
இன்னும் கூடும்

மா..! சொல்லு
உறவின் வேர்கள்
உலகை ஈர்க்கும்

உன் நிலை
அறிவிக்க
இந்த மா விற்குதான்
எத்தனை வடிவங்கள்!

மோகிக்கும் போது
உம் மா வில்

பரிதவிப்பின் போது
ஏம் மா வில்

ஆமோதிக்கும் போது
ஆ மா வில்

நான் கேலி பேசுகையில்
அம் மா வில்

நான் மெளனிக்கும்
மறுகணம்
என்னம் மா வில்

உன்
செல்லக் கோபத்தின்
போ மா வில்

என
எல்லா இடங்களிலும்
ஈறு கெடாத பெயரின்
உச்சமாய்
சொக்கி நிற்கிறது
இந்த மா..!

கிச்சி கிச்சி மூட்ட
கிளர்ச்சிகள் கூட்ட

உயிர்களை பூக்க
உணர்வுகள் ஆக்க

சிறகுகள் விரிக்க
சிந்தனை கொடுக்க

கனவுகள் விதைக்க
கவிதைகள் படைக்க

உலகைக் குடிக்க
அழகை வடிக்க

என்னை என்னை
மறுபடி மறுபடி
பிறக்கச் செய்துப்
புதுப் பொலிவாக்க..
எல்லாம் உந்தன்
மா..! வால் முடியும்..

மா..!
எனக்கான
காலக் கணக்கின்
கூட்டல் குறியீடு

மா..!
எனக்கான
மகிழ்வெளியின்
கிழக்கு சூரியன்

மா..!
எனக்கானக்
காட்சிப் பிழைகளின்
கடிவாளம்

மா..!
எனக்கான
வலிகளின்
ஒரே நிவாரணீ

மா..!
எனக்கான
மங்கல ஓசை

மா..!
என் உயிரின்
கடைசித் துளிக்கு
அதுவே
முற்றுப் புள்ளி..!

ஆசிரியை நீ!

ஆசிரியை நீ!
என் தூரிகைப் பிடித்து
உயிர் ஓவியம் எழுதக்
கற்பித்தவள்..

உன்னை வரைய
என்னைப் பிழிந்து
என்னை அறிய
தன்னையே கொடுத்தவள்..

உயிரும் மெய்யும்
உருகும் கலையை
உணர்வின் உச்சம்
பருகும் கலையை
அள்ளிக் கொடுத்த
அமுத சுரபி நீ..

ஓ!
அந்த இரவின்
ஒவ்வொரு துளியும்
என் அனுக்களில்
அமுதம் நிரம்பி வழிறது..

மேகம் கணத்து
நீர் பெருக்கெடுத்தால்
பயிர் செழிக்கும்
என் தேகம் கணத்து
நீர் பெருக்கினாய்
உயிர் செழிக்கிறது,.

செல்லம்
புஜ்ஜிமா
கண்ணம்மா
குட்டிமா
குண்டம்மா..
அத்தனையும் விட
அதிகமாய் இனிக்கிறது
உயிர் உருகளின்போது
நாம் எழுப்பும்
ஒலி வடிவங்கள்....

உன் அனுமதிகளில்
நிரூபணமாகிறது
உனக்கும் எனக்குமான
புனிதம்..

உன்
விரல்களின் ஸ்பரிசத்தில்
ஒழிந்து கிடக்கிறது
எனக்கானப் பிறவிப் பயன்..

உன் சிணுங்கல்களில்
கட்டி எழுப்பப் படுகிறது
எனக்கான சிறு சிறு
சுவர்க்கங்கள்..

உன் மூச்சுக் காற்றில்
செத்து மடிகிறது
என் பேச்சுக்கள்..

என் ஏக்கத்தை
எதிர்கொள்ளும் பொழுதுகளில்
கூசுகிறது என்கிறாய்
இப்பொழுது
நானல்லவா
அதிகம் கூசுகிறேன்
அத் தாக்கத்தை எழுதும்
வரிகளில்..

அட !
என்ன விந்தை இது
நான் மட்டுமல்ல
நீ கூட "விந்தை" செய்கிறாய்..

ஆம்!
அந்த இரவே
நம் அன்பின்
ஒட்டுமொத்த அடையாளம்...

Saturday, August 21, 2010

கொக்குகளே!குருவிகளே!

கொக்குகளே.குருவிகளே
குற்றால அருவிகளே
பக்குவமா பாட்டு ஒன்னு
பாடுகிறேன் கேளுங்களேன்...

அக்கரையின் சீமையிலே
அழகின் வெள்ளாமையிலே
"அக்கறையின்" அர்த்தமென
ஆங்கொருத்தி எனக்கிருக்கா

மலையகத்தின் மாது அவள்
கலையழகின் தூது அவள்
விலைக்கேதும் ஒப்பில்லா
தலைவி அவள்,தாரமவள்

அறிவியலின் அதிசயமாம்
இணையவெளி பெரும் பரப்பில்
செறிவான குணங்களுடன்
சேர்ந்த புது சொத்து அவள்

அண்ணாவின் தேடல்தனில்
எந்நாளும் எனக்காக
பொன்னான ஓர்பொழுதில்
என்னோடு மனம்புகுந்தாள்

அன்னையவள் அன்பிற்கு
தன்னையவள் ஈடாக்கி
என்னையவள் சீராட்ட
இன்னுமொரு தாயானாள்

வெள்ளை மனம் நல்ல குணம்
கொள்ளை நிலா கொண்டமுகம்
வள்ளல் அவள் அன்பு நிதம்
அள்ள அள்ளக் குறையலியே

காலமெலாம் அவள் நினைப்பில்
கரைந்துவிட நான் நினைப்பேன்
ஞாலமது ஓய்ந்திடினும்
நான் அவளின் துணையிருப்பேன்...

Saturday, August 14, 2010



கவி பிரியா
கவி பிரியன்..

எங்கள் கவிதைப் புணர்ச்சியில்
கருத் தரித்த
கவிக்குஞ்சுகள் அவர்கள்..

இப்புவியின்
வசந்தம் எழுதப்
புறப்படப் போகும்
கவி தாசர்கள்....

அன்பின்
செழுமை தாங்கி
அர்த்தமுள்ள மனிதர்களைப்
பிரசவிக்கும
அட்சயப் பாத்திரம்
அவர்கள்...


வைகறையின்
புதுக் கதிர்கள்..

வசந்தத்தின்
வரவுகள்..

ஆம்!
அவர்கள்
எங்கள் குழந்தைகள்.